தலைமன்னார் பொலிஸ்நிலையப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னோடு தவறாக நடக்க முற்பட்டதாகத் தெரிவித்து அதே கிராமத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
குறித்த பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில்,
தலைமன்னார் கிராமப்பகுதியில் வசிக்கும் எனது கணவர் முச்சக்கர வண்டி வைத்துள்ளார். ஒரு நாள் நள்ளிரவு அவசர முச்சக்கர வண்டி சவாரிக்குச் சென்ற போது எனது கணவர் வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வீட்டிலே விட்டுச் சென்று விட்டார்.
இந்த நிலையில் உடனடியாக எனது தம்பியிடம் குறித்த ஆவணங்களை கொடுத்து அனுப்பினேன்.
சற்று நேரம் கழித்து எனது தம்பி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தொலைபேசி அழைப்பு வந்தது.
என்னையும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். பொலிஸ் நிலையம் சென்ற போது தம்பி மாடு திருட முயன்றதால் கைது செய்ததாகவும் உன் தம்பியை விட வேண்டும் என்றால் நான் அழைக்கும் இடத்திற்கு தனியாக வர வேண்டும் என குறித்த பொலிஸ் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.
அதனால் தான் கோவம் அடைந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவே வெளியே வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி அப் பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டு தன்னுடைய நிபந்தனைக்கு அடிபணியுமாறு கோரியுள்ளார்.
குறித்த பெண் தனது கணவனின் அறிவுரையின் படி குறித்த பொலிஸ் அதிகாரியின் உரையாடலை பதிவு செய்துள்ளார்.
பின்னர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த உரையாடல்களை ஒப்படைத்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் மாற்றம் செய்வதாக வாக்குறுதி அழித்தனர்.
ஆனால் குறித்த அதிகாரி தொடர்சியாக எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார். குறித்த பொலிஸ் அதிகாரியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்ததால் தொடர்சியாக இரவு நேரங்களில் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செயற்படுவதாகவும் பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எனவே மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த விடயத்தில் தலையிட்டு நீதியை பெற்று தந்து எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தறுமாறு குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கோரிக்கையை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.